இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத, இளமைத் துடிப்பான ஒரு தலைவராக வலம் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் மிக இளம் வயது பிரதமராகப் பொறுப்பேற்று, நாட்டை இருபத்தியோராம் நூற்றாண்டை நோக்கித் தொலைநோக்குப் பார்வையுடன் வழிநடத்திய ஒரு தலைவரின் வாழ்வையும், அவரது பங்களிப்பையும் நினைவுகூர்வோம்.
இளமை மற்றும் அரசியல் வருகை
1944 ஆகஸ்ட் 20 அன்று பிறந்த ராஜீவ் காந்தி, ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபாடு காட்டாமல் ஒரு வணிகரீதியான விமான ஓட்டியாகவே (Pilot) தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார். ஆனால், 1980-ல் அவரது சகோதரர் சஞ்சய் காந்தியின் திடீர் மறைவு மற்றும் 1984-ல் அன்னை இந்திரா காந்தியின் படுகொலை ஆகிய வரலாற்றுச் சூழல்கள் அவரை அரசியலுக்குள் கொண்டு வந்தன.
1984-ல் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு, இந்தியாவின் 6-வது பிரதமராகத் தன் 40-வது வயதில் அவர் பொறுப்பேற்றார். இந்தியாவின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமை இன்றும் அவருக்கு உண்டு.
நவீன இந்தியாவின் தந்தை
ராஜீவ் காந்தியின் 5 ஆண்டு கால ஆட்சி, இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் சமூகக் கட்டமைப்பில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவில் இன்று கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை உலகளவில் பேசப்படுவதற்கு ராஜீவ் காந்தியே அடித்தளம் இட்டார். “இந்தியாவின் கணினிப் புரட்சியின் தந்தை” என்று அவர் போற்றப்படுகிறார்.
கிராமப்புறங்களுக்கும் தொலைபேசி வசதியைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘C-DOT’ அமைப்பை உருவாக்கி, சாம் பிட்ரோடாவுடன் இணைந்து தொலைத்தொடர்புப் புரட்சியை ஏற்படுத்தினார்.
இளைஞர்கள் நாட்டின் முடிவுகளில் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக, வாக்குரிமை வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைத்து (61-வது அரசியலமைப்புச் சட்டம்) வரலாற்றுச் சாதனை படைத்தார்.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை மற்றும் திறமையான மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க ‘ஜவஹர் நவோதயா வித்யாலயா’ பள்ளிகளைத் தொடங்கினார்.
அதிகாரத்தை அடித்தட்டு மக்களிடமும், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிடமும் கொண்டு சேர்க்கும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு அவரே முதன்முதலில் வித்திட்டார்.
இந்தியாவின் வளர்ச்சி என்பது கிராமங்களில்தான் உள்ளது என்னும் காந்தியின் குரலை பஞ்சாயத்து ராஜ் சட்டம் வழியே செயல்படுத்தியவர் ராஜீவ்காந்திதான்.
ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதும், அதற்குப் பிறகும் அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்தவும், உள்நாட்டு அமைதிக்காகவும் (அசாம் ஒப்பந்தம், மிஸோரம் ஒப்பந்தம் போன்றவை) அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
1991 மே 21 அன்று, மீண்டும் பிரதமராவதற்கான தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு வருகை தந்தபோது, எல்.டி.டி.இ (LTTE) மனித வெடிகுண்டுத் தாக்குதலில் அவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவு ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது.
பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிப்பு
ராஜீவ் காந்தியின் மறைவு தினமான மே 21-ம் தேதி, ஆண்டுதோறும் இந்தியாவின் “தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாளாக” (National Anti-Terrorism Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வன்முறையற்ற, அமைதியான சமூகத்தை உருவாக்க இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
அரசியல் ரீதியான விமர்சனங்கள் கடந்து, இந்தியாவின் வளர்ச்சிக்கு ‘டிஜிட்டல்’ பாதையை அமைத்துக் கொடுத்த ஒரு நவீனத் தலைவராக ராஜீவ் காந்தி என்றும் நினைவு கூரப்படுவார். அவரது நினைவு தினத்தில், வன்முறையற்ற பாரதத்தை உருவாக்க நாமும் உறுதியேற்போம்!
பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்களின் 35-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அகில இந்திய ராஜீவ்காந்தி யாத்திரை குழுவினர் ஆர். துரைவேலு தலைமையில் கடந்த 15.5.2026 அன்று பெங்களுரில் இருந்து புறப்பட்டு ஈரோடு, பவானி, சேலம், ஆத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, செங்கம், திருவண்ணாமலை, செஞ்சி, திண்டிவனம் மற்றும் புதுச்சேரி வழியாக இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடம் சென்றடைகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் நேற்று (20.05.2026) மாலை சென்னை வந்த ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை குழுவினரை வரவேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, அண்ணா சாலை ஜிம்கானா கிளப் முகப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் ராஜீவ் காந்தி ஜோதியை பெற்றுக் கொண்டார்.
ராஜீவ்காந்தி நினைவு தினமான இன்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
காலை 7 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதோடு, தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்படுகிறது.
7.30 மணிக்கு சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது
8.00 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்துவதோடு, கங்கை, மெக்கா மற்றும் இஸ்ரேலின் ஜோர்டான் நதி போன்ற இடங்களிலிருந்து பெறப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட உள்ளது.
அமைச்சர்கள் பதவியேற்பு
ராஜீவ்காந்தி நினைவு தினமான இன்று நடைபெறவிருக்கும் தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ மற்றும் மேலூர் எம்.எல்.ஏ விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸ் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறது.
மு.செய்யது
