திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரப் பகுதியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 1.4 ஏக்கர் நிலம், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடையது எனக் கூறப்படும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின் பெயரால் சட்டவிரோதமாக தனிநபர்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து பழனி கோயில் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பதிவை ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்ட இந்த 1.4 ஏக்கர் நிலம், பல ஆண்டுகளாக பக்தர்களின் இலவச வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோயில் நிர்வாகம் இந்த நிலத்தை பதிவு செய்யக்கூடாது என மூன்று முறை எழுத்துப்பூர்வமாக எச்சரித்திருந்தும், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை முழுமையாகப் புறக்கணித்து, கடந்த ஜூலை 6-ம் தேதி சிறப்புப் பணியில் இருந்த இணைப் பதிவாளர் (கூடுதல் பொறுப்பு) இந்த நிலத்தை இரண்டு தனிநபர்களுக்கு வெறும் 2 கோடி ரூபாய்க்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோயில் நிர்வாகம் சார்பில் பத்திரப் பதிவுத் துறைக்கு அனுப்பியுள்ள விரிவான மனுவில், “பழனி கோயில் இணை ஆணையர் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு தக்காராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை நீக்கக் கோரிய மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மடத்திற்குச் சொந்தமான இந்த நிலத்தை தனிநபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது என உத்தரவு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “எந்த ஆவணங்களையும் சரியாக சரிபார்க்காமல், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள், கோயில் நிர்வாகத்தின் எழுத்துப்பூர்வ அறிவிப்புகளை மதிக்காமல் பதிவு செய்யப்பட்டது சட்டவிரோதம்” எனக் கூறி, பத்திரப் பதிவை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பத்திரப் பதிவுத் துறைத் தலைவர், மதுரை மண்டல துணைத் தலைவர் மற்றும் திண்டுக்கல் மாவட்டப் பதிவாளர் ஆகியோருக்கு அனைத்து ஆதாரங்களுடன் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதோடு, தகுதியற்ற ஆவணங்கள் மூலம் பதிவு செய்த சார் பதிவாளர், நிலத்தை எழுதிக் கொடுத்தவர் மற்றும் வாங்கியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பழனி கோயில் நிர்வாகத்திலும், இந்து சமய அறநிலையத்துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, சொத்து மீட்டெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
