ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், இந்தியா உட்பட பல நாடுகளுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
அதேவேளை, பாகிஸ்தான், கத்தார் போன்ற நாடுகளின் முயற்சியால் அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்க் கட்டணம் விதிக்கப்படும் என்று ஈரான் அறிவித்தது. மேலும், தங்கள் அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடந்ததாக கூறி சரக்கு கப்பல் மீது ஈரான் நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் தெற்கு துறைமுக நகரமான தஹிரியொ பெரி நகரில் ஏவுகணை, டிரோன் மற்றும் ஆயுதக்கிடங்குகள், ரேடார் கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
ஈரான் மீது தொடர்ந்து 2வது நாளாக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் குவாசம் தீவில் உள்ள சிரிக் நகர், ஹர்முஸ்கன் மாகாணத்தில் உள்ள பண்டர் இ லெங்கா ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
