நொய்டாவின் முக்கியத் தொழில்பேட்டைப் பகுதியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது. அங்குள்ள தனியார் உற்பத்தி நிறுவன ஊழியர்கள், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி கடந்த சில நாட்களாகப் போராடி வந்த நிலையில், இன்று நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நிறுவனத்தின் சொத்துகளைச் சேதப்படுத்த முயன்றபோது, அவர்களைத் தடுக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் உருவானது.

இந்த மோதலின் போது போராட்டக்காரர்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், நிறுவனத்தின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். இதனால் நொய்டா – கிரேட்டர் நொய்டா இணைப்புச் சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. நிலைமையைக் கட்டுப்படுத்த அதிரடிப் படையினர் மற்றும் ஆயிரக்கணக்கான கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, வன்முறையாளர்கள் மீது லேசான தடியடி நடத்தப்பட்டது. தற்போது அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நிர்வாகம் மற்றும் தொழிலாளர் சங்கம் இடையே பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வெளிநபர்களே வன்முறையைத் தூண்டியதாகத் தனியார் நிறுவனம் தரப்பில் கூறப்படும் நிலையில், நியாயமான கோரிக்கைகளை மதிக்காமல் போலீசார் மூலம் ஒடுக்குவதாகத் தொழிலாளர்கள் சாடுகின்றனர். தற்போது அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், அந்த இடமே ஒருவித மயான அமைதியுடன் காணப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version