ஐபிஎல் 2027 சீசன் நெருங்கி வரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. அந்த அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த்தை லக்னோ அணி விடுவித்துள்ளதால், அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஏடன் மார்க்ரம் லக்னோ அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லக்னோ அணியின் காலிப்பணியிடமாக உள்ள கேப்டன் பதவி குறித்து மார்க்ரம் வெளிப்படையாகப் பேசியுள்ளார். கேப்டன் பதவியைப் பற்றி தான் பெரிதும் கவலைப்படவில்லை என்றும், அணியின் புதிய கேப்டனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அணி நிர்வாகத்திடம் விட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கிரிசின்போ ஊடகத்திற்கு மார்க்ரம் அளித்த பேட்டியில், “எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் எதைச் சிறந்ததாக நினைக்கிறார்களோ அதை முடிவு செய்யலாம். எங்களிடம் அணியில் பல தரமான தலைவர்கள் இருக்கிறார்கள், அதனால் நான் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. யாருக்கு அந்தப் பொறுப்பு கிடைத்தாலும் அவர்கள் சிறப்பாகச் செய்வார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன், இருப்பினும் நான் அதைப் பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ‘தி ஹுண்ட்ரெட் 2026’ (The Hundred 2026) கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்தி வரும் மார்க்ரம், இந்தத் தொடரில் விளையாடுவது குறித்தும் தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

“இது பல சவால்களுடன் வருகிறது, ஆனால் மிகவும் அருமையாக இருக்கிறது. நான் இதை முழுமையாக ரசித்து வருகிறேன். ஜோஸ் பட்லர் போன்ற வீரர்கள் என்னுடன் இருப்பது மிகவும் உதவியாக இருக்கிறது, அவர் எனக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளார்” என்று மார்க்ரம் தெரிவித்தார்.

மேலும், “இந்த வடிவம் மிகவும் வேகமானது. ஒரு முனையில் இருந்து தொடர்ந்து 10 பந்துகள் வீசப்படுவது சவாலானது. இன்னும் 5 பந்துகள் மீதமிருக்கின்றன என்பதை சில சமயம் மறந்துவிடுவோம். இருப்பினும், இது ஒரு சிறந்த மற்றும் உயர்தரப் போட்டி, நான் இதில் விளையாடுவதை மிகவும் ரசித்து வருகிறேன்” என்றும் அவர் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version