முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட பரபரப்பு வழக்கில், சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் லட்சுமண பெருமாள் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தற்போது போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜா, த.வெ.க. அரசை கவிழ்க்க சதி நடைபெறுவதாக திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 9 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகரைச் சேர்ந்த நரேஷ், கரூர் தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய ஐந்து பேரும் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர்.
இந்த ஐந்து பேரும் போலீசாரின் இரண்டு நாள் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். விசாரணையில், கைதானவர்களுடன் சிங்கப்பூர் தொழில் அதிபர் லட்சுமண பெருமாள் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதும், சட்டவிரோத ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் நடைபெற்றதும் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் நீண்ட காலமாக வசித்து வரும் லட்சுமண பெருமாள், சென்னையில் உள்ள பல அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலரின் ஆலோசனையின் பேரில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கில் அவர் சென்னையைச் சேர்ந்த நபர்களுடன் தொடர்பு கொண்டு பேசியதாக போலீசார் கூறுகின்றனர். மேலும், இவர் சென்னையில் ஒரு முன்னாள் அமைச்சருக்கு பினாமியாக செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை அழிக்க லட்சுமண பெருமாள் சிங்கப்பூரில் இருந்தபடியே முயற்சி மேற்கொண்டதாக, செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு விசாரணையின்போது அரசு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில், லட்சுமண பெருமாளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவருக்கு எதிராக ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இதே வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தினசரி காலையிலும் மாலையிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இருவரும் விரைவில் போலீஸ் நிலையத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
