தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதரவு தருமாறு எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்ட வழக்கில், மேலும் இரு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.56 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜா, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்.எல்.ஏ.க்களிடம் பணம் பேரம் பேசி ஆதரவு திரட்ட முயற்சி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், திருவல்லிக்கேணி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதுவரை மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு கைது செய்யப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ்குமார் ஆவர். பெங்களூருவில் பதுங்கியிருந்த இவர்களை தனிப்படை போலீசார் அங்கு சென்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சிக்கு எதிராக சதி நடைபெற்றதாக கூறப்படும் இந்தச் சம்பவம், எம்.எல்.ஏ.க்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இரு மருத்துவர்களையும் இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு விசாரணையும் விரைவில் முடிக்கப்பட்டு, உண்மை வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version