அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த 2024-ல் பிரதிஷ்டை செய்யப்பட்ட இக்கோயிலுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.

இங்கு வரும் பக்தர்கள் மனமுவந்து அளிக்கும் காணிக்கைகள் அறக் கட்டளையின் கட்டுப்பாட்டின் கீழ் கையாளப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்கள் கோவிலுக்கு வழங்கிய இந்த காணிக்கையில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக சமீபத்தில் புகார் எழுந்தது. சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த குற்றச்சாட்டை எழுப்பினார். அவரை தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் இந்த புகாரை தெரிவித்தனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்தார். அந்த குழுவும் விசாரித்து தொடக்க அறிக்கையை முதல்-மந்திரியிடம் வழங்கினர். இந்த அறிக்கையின் அடிப்படையில் காணிக்கை முறைகேடு தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், 2025 மே மாதத்தில் இருந்தே ராமர் கோவிலில் நன்கொடை திருட்டு நடந்து வந்திருப்பதாகவும், தினமும் ரூ.6-8 லட்சம் வரை திருடப்பட்டிருக்கலாம் என்றும் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்பு தினமும் ரூ.16 – ரூ.18 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டு வந்த கோவில் பணம், திருட்டு விவகாரம் வெளிவந்த பிறகு ரூ.24 – ரூ.26 லட்சமாக அதிகரித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விவகாரத்தில் கைதானவர்கள் அண்மையில் வீடுகளை கட்டி, கார்கள் வாங்கியிருந்ததும், இவர்களின் மாத சம்பளம் வெறும் ரூ.15,000 என்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த பரபரப்பான சூழலில் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கூட்டம் இன்று நடக்கிறது. அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங் காவலர் அனில் மிஸ்ரா ஆகியோரின் ராஜினாமா குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. காணிக்கை முறைகேடுகள், சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை ஆகியவற்றின் மத்தியில் நடைபெறும் இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version