பள்ளி மாணவ-மாணவிகளின் உடல் நலத்தைப் பாதுகாக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. பள்ளி வளாகங்களில் சமோசா, வடபாவ், சிப்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் உள்ளிட்ட அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள இந்த உத்தரவின்படி, பள்ளி வளாகத்திற்குள் மட்டுமின்றி, பள்ளியிலிருந்து 50 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளிலும் இத்தகைய உணவுகளை விற்பனை செய்யவும், அவற்றுக்கான விளம்பரங்களை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார், உறைவிடப் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களின் கீழ் இயங்கும் சுமார் 1.08 லட்சம் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
பள்ளி கேன்டீன்கள், ஹாஸ்டல் உணவகங்கள், மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு உணவு வழங்கும் அனைத்து சமையல் கூடங்களிலும் உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (FSSAI) சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு பாதுகாப்பு தகவல் பலகை வைத்தல், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் நியமித்தல், ஹெல்த் & வெல்னஸ் நடவடிக்கைகள், தூய்மையான குடிநீர் வசதி, சுகாதாரமான சமையலறை ஆகியவை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டே இது குறித்து கூறுகையில், “’Safe Food, Safe Maharashtra’ என்ற பிரசாரத்தின் கீழ் மாணவர்கள் ஆரோக்கியமான, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பள்ளி முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகள் முதற்கட்டமாக இந்த உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். விதிகளை மீறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006-ன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்தத் தடை உத்தரவு, உலக அளவில் அதிகரித்து வரும் குழந்தைகளிடையேயான பருமனான உடல் எடை, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு எதிரான முக்கியப் படியாகக் கருதப்படுகிறது. பள்ளி நாட்களில் மாணவர்கள் நாளின் பெரும் பகுதியைச் செலவிடும் இடத்தில் சத்தான உணவு கிடைப்பது அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு அடிப்படையானது என உடல்நல நிபுணர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
