கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே தனிநபருக்கு சொந்தமான நிலத்தை சுற்றி கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் நின்றிருந்த மதில்சுவர் திடீரென சரிந்து விழுந்த நிகழ்வில் மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
அடைக்காக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட மேல நெய்தவிளை செல்லும் சாலையோடு சேர்த்து தனிநபருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை சுற்றிக் கட்டப்பட்டிருந்த மதில் சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்து வந்துள்ளது. இதனை ஒட்டிய பாதையில்தான் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் சென்று வந்தனர். இதனால் அந்தச் சுற்றூச்சுவரை சீரமைக்க பலமுறை உரிமையாளரிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அவர் அதனைக் கண்டு கொள்ளாத நிலையில், இந்த ஆபத்தான மதிற்சுவர் திடிரென இடிந்து சாலையின் மீது விழுந்தது. நல்வாய்ப்பாக அந்த நேரத்தில், அந்த பகுதி வழியாக பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நடந்து செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தற்போது இடிந்து விழுந்த சிமென்ட் கற்கள் சாலையின் மீது விழுந்து கிடப்பதால் மக்களால் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதில்சுவர் திடீரென இடிந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
