கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பாறைகளை பிடித்து உயிருக்கு போராடிய மூதாட்டியை, தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி அதிரடியாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று ஆற்று வெள்ளத்தின் சுழலில் மூதாட்டி ஒருவர் எதிர்பாராதவிதமாக சிக்கி, தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதைப் பார்த்த கரையில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துள்ளனர்.

தண்ணீரில் அடித்து வரப்பட்ட அந்த மூதாட்டி, நல்வாய்ப்பாக ஆற்றின் மையப்பகுதியில் இருந்த பெரிய பாறைகளுக்கு இடையே சாய்ந்து நின்றார். வெள்ளத்தின் வேகம் அவரை இழுத்துச் செல்ல முயன்றபோதிலும், பாறைகளைத் தன் கைகளால் பலமாகப் பற்றிக்கொண்டு, காப்பாற்றுமாறு சத்தமிட்டு குரல் எழுப்பியுள்ளார்.

இதனைப் பார்த்த மக்கள் உடனடியாக பாகலூர் காவல் நிலையத்திற்கும், ஓசூர் தீயணைப்பு நிலையத்திற்கும் அவசரத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குப் பாய்ந்து வந்த மீட்புக் குழுவினர், சீறிப்பாய்ந்த வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் இறங்கினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கயிறுகளின் துணையோடு பாறையில் தவித்துக் கொண்டிருந்த மூதாட்டியைப் பத்திரமாக மீட்டுக் கரை சேர்த்தனர்.

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மூதாட்டிக்குக் கரையில் முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர், அவர் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version