கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர்.

இதையடுத்து, இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், தினமும் காலை 10.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் செந்தில்பாலாஜி மற்றும் அசோக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி, இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெற்று, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தொடர்ந்து ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், டாஸ்மாக் மதுபான கொள்முதல், வாகன டெண்டர் மற்றும் காலி பாட்டில் சேகரிப்பு ஒப்பந்தங்களில் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக, செந்தில்பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய செந்தில்பாலாஜியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், குதிரை பேர வழக்கில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையின்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுவதிலிருந்து ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4 வரை 6 நாட்களுக்கு விலக்கு வழங்கக் கோரி அவர் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

அந்த மனுவில், ஜூலை 25 முதல் நீதிமன்ற நிபந்தனையின்படி தொடர்ந்து ஆஜராகி கையெழுத்திட்டு வருவதாகவும், அனைத்து நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்பாக சட்ட ஆலோசனைகள் மற்றும் வழக்கு தயாரிப்பில் ஈடுபட வேண்டியிருப்பதால், 6 நாட்களுக்கு மட்டும் விலக்கு வழங்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 5 முதல் மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடத் தயாராக இருப்பதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version