காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கு முன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த முடிவு எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், த.வெ.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாமல், ரூ.75 ஆயிரம் வரை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்திருப்பது விவசாயிகளை ஏமாற்றும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளார்.

”இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தேர்தல் வாக்குறுதியின்படி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும். இல்லையெனில் அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக திறக்கவில்லை. ஜூலை மாதத்திற்கான நீர் பங்கீட்டிலும் குறைபாடு உள்ளது.

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருந்தாலும், கர்நாடக அரசு அதனை ஏற்க மறுத்துள்ள சூழலில் தமிழக முதலமைச்சர் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதில் கடுமையான பாதிப்பு ஏற்படும். சுமார் 20 மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன நெருக்கடி உருவாகும். எனவே, கர்நாடகா பயணத்திற்கு முன் அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி ஒருமித்த முடிவு எடுக்க வேண்டும்.

மேலும், கர்நாடக முதலமைச்சர் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ஏற்க மறுத்துள்ளதையும், மேகதாது விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அளித்த பதிலையும் தமிழக அரசு கண்டிக்காமல் மவுனமாக இருப்பது ஏற்க முடியாதது” என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version