இந்திய துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டின் முகவரியை மாற்றியமைத்த மாபெரும் சாம்பியனும், திறமையான பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா தனது 49வது காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை முடித்துவிட்டு திரும்பிய அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு, ஒரு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
வீரராகவும், பயிற்சியாளராகவும் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த ஜஸ்பால் ராணாவின் வாழ்நாள் சாதனைகளையும் அவர் படைத்த வரலாற்றுச் சாதனைகளையும் தெரிந்துகொள்வோம்.
ஜஸ்பால் ராணா தனது 12-ஆவது வயதிலேயே தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார். 1988-இல் அகமதாபாத்தில் நடைபெற்ற 31-ஆவது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்திய துப்பாக்கிச் சுடுதல் துறையில் தனது முதல் முத்திரையைப் பதித்தார்.
சர்வதேச அரங்கில், குறிப்பாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் தவிர்க்க முடியாத சக்தியாக ராணா திகழ்ந்தார். 1994 முதல் 2006 வரை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவுக்காக 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வாரிக் குவித்து அசத்தினார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில், இந்தியாவின் மிக வெற்றிகரமான தடகள வீரர்களில் ஒருவராக ஜஸ்பால் ராணா திகழ்கிறார். 1994, 1998, 2002 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 9 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். குறிப்பாக, 2002 காமன்வெல்த் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றதோடு மட்டுமில்லாமல், பிஸ்டல் பிரிவில் புதிய சாதனைப் புள்ளிகளையும் பதிவு செய்து அசத்தினார்.
இந்திய துப்பாக்கிச் சுடுதல் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, நாட்டின் மிக உயரிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. ஆசிய விளையாட்டில் காட்டிய அசாத்திய திறமைக்காக மிக இளம் வயதிலேயே இந்த விருதைப் பெற்றார். நாட்டின் உயரிய குடிமகன் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு, உத்தரகண்ட் மாநிலத்தின் மிக உயரிய குடிமகன் விருதான ‘உத்தரகண்ட் கௌரவ் சம்மான்’ விருது இவருக்கு வழங்கப்பட்டது.
விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், ஜஸ்பால் ராணா துப்பாக்கிச் சுடுதல் துறையை விட்டு விலகவில்லை. ஒரு சிறந்த பயிற்சியாளராக மாறி, இந்தியாவின் அடுத்த தலைமுறை துப்பாக்கிச் சுடுதல் வீரர்களை உருவாக்கினார். குறிப்பாக, அண்மையில் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்று சாதனை படைத்த மனு பாக்கரின் பயிற்சியாளராக இருந்து, அவரை உலகத் தரம் வாய்ந்த வீராங்கனையாக செதுக்கிய பெருமை ஜஸ்பால் ராணாவையே சாரும். வீரராகப் பதக்கங்களை வேட்டையாடி, பயிற்சியாளராகப் பதக்கங்களை உருவாக்கிக் காட்டிய இந்த மாபெரும் ஜாம்பவானின் மறைவு, இந்திய விளையாட்டுத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்!
