நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், பிரபல பாடகர் அறிவு சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், விசாரணைக்குப் பின் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து நீட் ரத்து கோரிக்கையை வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் மருத்துவ மற்றும் பல் மருத்துவ உள்ளிட்ட உயர் கல்வி அனுமதிக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. பல மாநிலங்களில் இந்த எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் முன்னணி பாடகரும், சமூக ஆர்வலருமான அறிவு இன்று சென்னை தலைமைச் செயலக வளாகத்தின் முன்பு திடீரென போராட்டத்தில் குதித்தார்.
“நீட் தேர்வை ரத்து செய்! மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்று!” என முழக்கங்களை எழுப்பிய அறிவு, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறி போலீசார் அவரை உடனடியாகத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் கூடியதால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. எனினும், விசாரணைக்குப் பின் அறிவு விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் தலைமைச் செயலகத்திலேயே முதலமைச்சர் விஜய்யை சந்தித்து நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். மாணவர்களின் மன உளைச்சல், தற்கொலை சம்பவங்கள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டிய அறிவு, தமிழ்நாட்டின் கல்வி உரிமைக்கு ஏற்ப மாநில அளவில் மருத்துவ அனுமதி வழங்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். முதலமைச்சர் விஜய் அறிவின் கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்டுக்கொண்டார். இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.
முன்னதாக தெருக்குரல் அறிவு உள்ளே செல்லும் போது உங்களுக்கு முதல்வரை நன்றாக தெரியும், அப்படியிருக்கும் போது போராடியது ஏன் என்ற கேள்விக்கு, ”மாணவர்களை அடிக்கக் கூடாது. அது ஜனநாயகத்துக்கு விரோதமானது” என்று பதிலளித்துவிட்டு உள்ளே சென்றார்.
