புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் பாஜக மாநில தலைவர் வி.பி ராமலிங்கம் தலைமையில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால சிறப்புமிக்க ஆட்சியை கொண்டாடும் வகையிலும், நாட்டின் பிரதமராக இதுவரை 4399 நாட்கள் பதவி வகித்து சாதனை படைத்துள்ள அவருக்கு நோய் நொடியின்றி நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்யும் முகமாக, புதுச்சேரி அருள்மிகு ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்தில் இன்று தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் தலைமையில் இந்த முக்கிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயம், முதலியார் பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார், முன்னாள் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் வழிபாடு நடைபெற்றது.
மேலும், சப்தகிரி நிர்வாகக் குழுமத்தின் துணை இயக்குநர் விஜய் ஆனந்த், புகழேந்தி, ஆனந்த், கண்ணன், மலர்மன்னன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊரின் முக்கியஸ்தர்களான முரளி, பாலசுப்ரமணியன், கிருஷ்ணசாமி, சீனிவாசன், ஞானம், நீலகண்டன், சக்ரவர்த்தி, ஆனந்த் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.
பாஜக சார்பில் வல்லூனர் பிரிவின் மாநில அமைப்பாளர் நாகராஜன், நகர மாவட்ட பொதுச் செயலாளர் ஆனந்த் பாஸ்கர், சீனிவாச பெருமாள், ஆன்மீகம் மற்றும் ஆலயப் பிரிவின் மாநில அமைப்பாளர் சாய் சுதாகர், சின்னதம்பி, அருண்குமார், ஆறுமுகம், ஜெயமூர்த்தி, சூசை உள்ளிட்ட பல மாநில நிர்வாகிகள் மற்றும் ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த ஏராளமான பாஜக பிரமுகர்கள் இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, பக்தர்கள் அனைவருக்கும் ஆலயத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பயனடைந்தனர்.
பிரதமர் மோடியின் தலைமையில் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக பாஜக நிர்வாகிகள் இந்த நிகழ்வில் பேசினர். கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா உலக அரங்கில் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், புதுச்சேரியிலும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மோடியின் தொலைநோக்குப் பார்வையால் நாடு வளர்ச்சியடைந்து வருவதாகவும், அவரது தொடர்ச்சியான தலைமைக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்த சிறப்பு வழிபாடு மூலம் பிரதமருக்கு நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், அவரது ஆட்சியின் சாதனைகளை நினைவுகூரும் வகையில் பக்தர்கள் ஒன்றிணைந்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சி புதுச்சேரி பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
