பிரேசிலில் நடைபெற்ற பங்கி ஜம்பிங் (Bungee Jumping) நிகழ்வில், பாதுகாப்பு உபகரணங்களை இணைக்காமல் இளம்பெண் ஒருவரைப் பாலத்திலிருந்து கீழே தள்ளிய பணியாளர்களின் கொடூர அலட்சியத்தால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாவ் பாலோ மாநிலத்தின் லிமெயிராவில் உள்ள “ஸ்கெலட்டன் பிரிட்ஜ்” (Skeleton Bridge) பகுதியில் இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது. மரிய எட்வார்டா ரோட்ரிக்ஸ் டி பிரேட்டாஸ் (21) என்ற இளம்பெண், பங்கி ஜம்பிங் செய்வதற்காகப் பாலத்தின் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த இருவர் அவரைத் தளத்தின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று, பாதுகாப்பு கயிறு எதையும் கட்டாமல் கீழே தள்ளியுள்ளனர். சுமார் 130 அடி (40 மீட்டர்) உயரத்திலிருந்து பள்ளத்தாக்கில் விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

https://x.com/RapidReport2025/status/2065862054552936513?

சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில், அந்தப் பெண் கீழே விழுந்த பிறகு, அங்கிருந்தவர்கள் அவர் மீது கயிறு கட்டப்படவில்லை என்று அலறுவது பதிவாகியுள்ளது. பணியாளர்கள் பாதுகாப்பு கயிற்றைக் கட்ட மறந்ததே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்று நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். நிகழ்வு நடந்த சிறிது நேரத்தில், சில அமைப்பாளர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். பின்னர், போலீஸ் ஹெலிகாப்டர் உதவியுடன் அருகில் இருந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பங்கி ஜம்பிங் நிகழ்வை நடத்திய “என்ட்ரே கார்டாஸ்” (Entre Cordas) நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்வது குறித்து சிவில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, தான் பாலத்தில் இருப்பதாகவும், நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அந்தப் பெண் பதிவிட்டிருந்தார். இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது வருங்கால கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாதுகாப்பற்ற முறையில் ஒருவரது உயிரைப் பறித்த இந்த நிகழ்வு, சாகச விளையாட்டுகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version