காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகம் திறப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் சூழலில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று (ஜூலை 30) மீண்டும் கூடுகிறது.
டெல்லி பிகாஜி காமா வளாகத்தில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் நேரடியிலும், இணையவழியிலும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டம் ஜூலை 22-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக நீர்வளத் துறை முதன்மைச் செயலர் சத்யப்ரதா சாஹூ, ஜூன் 1 முதல் ஜூலை 19 வரை பில்லிகுண்டுலுவில் 3.442 டி.எம்.சி நீர் மட்டுமே கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 28.337 டி.எம்.சி நீர் கிடைத்திருக்க வேண்டும் என்றும், இதனால் 24.896 டி.எம்.சி அளவுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், கர்நாடகப் பிரதிநிதிகள் போதிய மழைப்பொழிவு இல்லை என்றும் வறட்சி மற்றும் பெங்களூரு நகர குடிநீர்த் தேவைகளைக் சுட்டிக்காட்டியும் தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஜூலை 28-ம் தேதி கூடி விவாதித்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு 4 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் எனப் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகின.
ஒழுங்காற்றுக் குழுவின் இந்த பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய விகிதாசார நீர்ப்பங்கு மற்றும் நிலுவையில் உள்ள தண்ணீரைத் திறந்துவிடுவது குறித்து இன்றைய காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே மாதத்தில் இந்த ஆணையம் இரண்டாவது முறையாகக் கூடுவது குறிப்பிடத்தக்கது.
