சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து தான் பயன்படுத்திய வார்த்தைகளுக்காக வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார்.

பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர் அவையில் பேசுகையில், முதலமைச்சரை விமர்சிக்கும் போது இவ்வளவு கடுமையான சொற்களைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தம்மை கடிந்து கொண்டதாகக் குறிப்பிட்டார். மேலும், சிறையில் தன்னைச் சந்திக்க வந்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரும், “விமர்சனங்கள் அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டுமே தவிர, வன்மமான வார்த்தைகளால் அல்ல” என அறிவுரை வழங்கியதாகக் கூறினார். எனவே, உணர்ச்சிவசப்பட்டு தான் கூறிய அந்த வார்த்தைகளை அனைவரும் பெருந்தன்மையோடு மறந்துவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் “கொலை வாளினை எடடா” என்ற வரியை மேற்கோள் காட்டிவிட்டு, “இந்த வரியைச் சொன்னதற்காகத் தயவுசெய்து என்னை மறுபடியும் கைது செய்து சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள்” என்று கலகலப்பாகக் குறிப்பிட்டார்.

பின்னர், தற்போதைய த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கையைக் கடுமையாக விமர்சித்த மார்க்கண்டேயன், இது எந்தப் புதிய திட்டங்களும் இல்லாத வெறும் ‘கானல் நீர் பட்ஜெட்’ எனச் சாடினார்.

முந்தைய திமுக ஆட்சியின் முன்னோடி திட்டங்களை அப்படியே எடுத்துக்கொண்டு, பெயர்களை மட்டுமே தற்போதைய அரசு மாற்றி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். ‘மாடித்தோட்டம்’ என்பதை ‘பூந்தோட்டம்’ என்றும், ‘அவகாடோவை’ ‘பட்டர் ஃப்ரூட்’ என்றும் பெயர் மாற்றுவது மட்டுமே இந்த ஆட்சியின் புதிய மாற்றம் என அவர் விமர்சித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version