திடீரென பலத்த சூறைக்காற்று வீசி வருவதன் காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை மீனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வானிலை திடீரென தலைகீழாக மாறியது. பலத்த சூறைக்காற்று வீசியதால், ரன்வேயில் விமானங்கள் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த பயணிகள் விமானம் ஒன்று சென்னையில் தரை இறங்க முடியாமல், உடனடியாக ஆந்திர மாநிலம் திருப்பதி விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டு, அங்குப் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
திடீர் வானிலை மாற்றம் காரணமாக, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் சென்னைக்கு வர வேண்டிய 10-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இன்று கணிசமான நேரம் தாமதமாகின. இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
விமான நிலையப் பகுதி மட்டுமின்றி, சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதலே பலத்த புழுதி காற்று வீசி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். வானிலை சீரான பிறகே விமான சேவைகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
