கேரளாவின் கத்ரிகடவு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகச் சங்கிலித் தொடரின் ஒரு கிளையில், உணவு உட்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடந்த ஜூலை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அந்த உணவகத்தில் உணவு அருந்திய சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 15 பேரின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், மூவருக்கு ஷிகெல்லா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொற்று பரவலுக்கு, குழிமந்தியுடன் பரிமாறப்பட்ட மயோனைஸ் தான் முக்கியக் காரணமாக இருக்கலாம் எனச் சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஏனெனில், மயோனைஸ் சாப்பிடாதவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், அப்பகுதி வணிகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள், மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீரில் தான் கிருமித் தொற்று இருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

உணவு நச்சுத்தன்மை பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, அந்த உணவகத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து அந்த உணவகத்தை உடனடியாக மூடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version