பிரபல இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரரும், ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர் மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49) இன்று அதிகாலை டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்தத் தகவலை இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கத்தின் (NRAI) தலைவர் கலிகேஷ் நாராயண் சிங் தியோ உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலகக் கோப்பை தொடரை முடித்துவிட்டு இந்திய அணியினருடன் தாயகம் திரும்பியபோது, ஜஸ்பால் ராணாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், அவர் உடனடியாக சாகேட்டில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு ‘ஸ்டென்ட்’ வைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அவர் உயிர் பிரிந்தது.

இதுகுறித்து மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துப்பாக்கிச் சுடுதல் வீரரும், இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா, இன்று காலை மேக்ஸ் சாகேட் மருத்துவமனையில் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த ஒரு சிறந்த விளையாட்டு வீரரின் மற்றும் பயிற்சியாளரின் இந்தத் திடீர் மறைவு இந்திய விளையாட்டு உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version