நீட் தேர்வுக்கு எதிராகவும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும் சென்னையில் தமிழ்த் திரைக்கலைஞர்கள் கண்டனப் போராட்டம் நடத்தி உள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி (CJP) சார்பில் நாடாளுமன்றத் நோக்கி பேரணியாக செல்லும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர்.

டெல்லியில் தாக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘நீலம்’ அமைப்பின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ஒரு நாட்டில் மாணவர் போராட்டத்திற்கு வருகிறார்கள் என்றால், அந்த நாட்டில் மற்ற அமைப்புகள் எதுவும் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம் என தெரிவித்தார். மாணவர் போராட்டம் என்பது, அரசின் தோல்வியாக உள்ளது குறிப்பிட்ட அவர், நீட்-ன் தாக்கம் என்ன என்பதை பார்க்க முடிவதாக கூறினார். நீட்-ன் மூலமாக நம்மிடமிருந்து மருத்துவ கல்வியை முழுமையாக எடுப்பதும், மருத்துவ அறிவை முழுமையாக எடுப்பதும் தான் அவர்களின் நோக்கமாக உள்ளது என்று வெற்றிமாறன் தெரிவித்தார். இது மீண்டும் நம்மை அவர்கள் முன்பு கைகட்டி நிற்கும் நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாகதான் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

திரைப்பட இயக்குநர்கள் அமீர், பா.ரஞ்சித், லெனின் பாரதி, அருண் மாதேஸ்வரன், ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஆண்ட்ரியா, மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version