கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக தொடக்கக் கல்வியில் பெற்றோர் அரசு பள்ளிகளை அதிகம் விரும்பி தேர்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

“அரசுப் பள்ளிகள் எங்கள் கண்கள். அந்தக் கண்களுக்கு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. கல்வித் தரம் உயர்ந்ததன் காரணமாகவே மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில், ஆறாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணினி அறிவியல் பயிற்றுநர்கள் தொடர்பான திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை வெளிப்படையாகக் கண்காணிக்கும் நோக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது. அந்தக் குழு பள்ளிக் கட்டண நடைமுறைகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்கும்.

மேலும், பள்ளிகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், கற்றலுக்கு உகந்த சூழலாகவும் பராமரிக்க பள்ளி அலுவலகங்களுக்கு வழங்கப்படும் நிதியை அதிகரிக்க முதலமைச்சர் விஜயிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மேலும் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜயின் கர்நாடக பயணம் குறித்த கேள்விக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து மட்டுமே வெளியாகும் என்றும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் ராஜ்மோகன் தெரிவித்தார். ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களே கருத்து தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version