தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி ) தமிழ்நாடு முதலமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது…

தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப் பேரவையில் தாக்க செய்துள்ள நிதி நிலை அறிக்கையில், அரசின் வரி வருவாய் ரூ 3 லட்சத்து 50 ஆயிரத்து 27 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டில் மதுபானங்கள் மீதான வரி வருவாய் 16, 17 சதவீதமாக 56000 கோடியாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்ட வருவாயாக இருக்கும்.

அரசின் நிதியாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வரும் பணியாளர் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நிதிநிலை அறிக்கை கடைக்கண்ணிலும் பார்க்க மறந்தது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

நீண்ட காலமாக பணியாளர்கள் வலியுறுத்தி வந்த இஎஸ்ஐ திட்டம் அக்டோபர் 2026 லிருந்து நடைமுறைக்கு வருவதை பணியாளர்கள் மகிழ்ச்சியுடன்  வரவேற்கிறோம். 

தற்போது, மதுபானங்களை விற்பனையை செயலி வழி தொடங்குவதாக அறிவித்துள்ளது. அதில் ஏற்படும் நடைமுறை இடையூறுகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மதுபானங்கள் சில்லரை விற்பனைக் கடைகளில் நிலவும் இட நெருக்கடியில், அடுக்கிப்போடப்படும் மதுபானப் பெட்டிகளில் அடிப்பகுதியில் உள்ள மதுபானங்களை  தேர்வு செய்து, ஆன்லைனில் பதிவு செய்து வரும் நுகர்வோர் அவசரத்தை எப்படி சமாளிப்பது? தமிழ்நாடு முழுவதும் சீரான, இடை தொடர்பு துண்டிக்காத,  இணைய வலைத் தொடர்பு இணைப்பு கிடைக்கிறதா? இதில் ஏற்படும் இடையூறுகள், தடைகள் எப்படி சமாளிப்பது?

இதற்கிடையில் உயர் நீதிமன்றம், மதுபானங்கள் வாங்கும் அனைவருக்கும் ரசீது வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை பணியாளர்கள் வரவேற்கிறோம். அதற்கான கட்டமைப்பு வசதிகளை நிர்வாகம் உடனடியாக செய்து தர வலியுறுத்துகிறோம் .

அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள மதுபான கடைகளில் உள்ளது போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

பரந்த இடவசதி உள்ள கடைகள் மற்றும் மது நுகர்வோர் வரிசையில் நின்று மதுபானங்கள் வாங்க பில்லிங் கவுண்டர், அந்த பில்லை கொடுத்து மது வாங்க தனி கவுண்டர் இந்த வரிசையில் மது நுகர்வோர் நிற்பதை கண்காணித்து வரிசைப்படுத்த தனியாக செக்யூரிட்டி மற்றும்  கடை வாடகை, மின்கட்டணம் , அட்டைப் பெட்டிகள் , உடையும் பாட்டில்களுக்கான இழப்பீடு,   காலிப்பாட்டில்கள் திரும்பப்  பெறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையில்  மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட நிறைவேற்றி கண்ணியமான பணி சூழலையும், வாழ்க்கை நிலையினையும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு உறுதிப்படுத்தித் தருவதில் நிதிநிலை அறிக்கை கவனம்  செலுத்த வேண்டும். அறிக்கை  மீதான பொது  விவாதங்கள் நடைபெறும் காலத்தில் முதலமைச்சர்,  டாஸ்மாக் பணியாளர் நலனிலும், நிர்வாகச் சீர்திருத்தத்திலும்   நேரடியாக தலையிட்டு, கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்.

இவ்வாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version