தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தின் இறுதியில் அறிவிக்கப்பட்ட ரூ. 2,000 கோடி மதிப்பிலான டெண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளர் கழகத்தின் 80வது ஆண்டு விழா சென்னை சேத்துப்பட்டு அண்ணா கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டார்.
பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், முந்தைய திமுக ஆட்சியின் இறுதியில் மின்சாதனங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான டெண்டர்கள் தற்போதைய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை தற்போது ரூ. 2.5 லட்சம் கோடியாக உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், இந்த நிதி நெருக்கடியில் இருந்து வாரியத்தைச் சீரமைக்க வேண்டியது அவசியமானது என்றார். இல்லையெனில் வரும் ஆண்டுகளில் மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
கடந்த காலங்களில் நிர்வாகச் சீர்கேடுகளும், டெண்டர் பணிகளில் முறைகேடுகளும் நடந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் நிர்மல்குமார், இனிவரும் காலங்களில் சோலார் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் வெளிப்படையான முறையில், முறையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
அனல் மின் நிலையங்களை மேம்படுத்தவும், மின்சாரத் துறையை லாபகரமானதாக மாற்றவும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மின்சாரத் துறையில் நிலவும் நிதி நெருக்கடியைக் குறைக்கவும், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
