வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவை சார்ந்திருப்பதைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் மின்சார இன்டக்ஷன் அடுப்புகளின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கான புதிய வழிவகைகளை அரசு தீவிரமாகத் தயாரித்து வருகிறது.
இந்தியாவின் வருடாந்திர எல்.பி.ஜி தேவையில் சுமார் 65% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது; இதில் 90% இறக்குமதிகள் மேற்கு ஆசியாவிலிருந்து பெறப்படுகின்றன. இப்பகுதியில் நிலவும் புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மையால் ஏற்படும் பொருளாதார அபாயங்களைக் குறைப்பதற்காகக் கொள்கை வகுப்பாளர்கள் இந்த மாற்றத்திற்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
மின்சார அடுப்புகளின் பயன்பாட்டை மக்களிடையே ஊக்குவிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளைக் பரிசீலித்து வருகிறது. அதன்படி, இதற்கான மானியங்கள் வழங்குவது, முக்கியக் கூறுகளுக்கான சுங்க வரியைக் குறைப்பது மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது போன்ற திட்டங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளன.
இது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மின் அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், நீதி ஆயோக், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வர்த்தக மேம்பாட்டுத்துறை, மின் விநியோக நிறுவனங்கள் மற்றும் துறை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவாதித்தனர் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்டக்ஷன் அடுப்புகளை மக்கள் பெருமளவில் ஏற்றுக்கொள்ளும் இந்த முன்னெடுப்பு, ஹேவெல்ஸ் இந்தியா, பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ், டி.டி.கே பிரெஸ்டீஜ் மற்றும் ஸ்டவ் கிராஃப்ட் போன்ற முக்கிய உள்நாட்டு சமையலறை உபகரணத் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த மாற்றம் தயாரிப்பு விற்பனை மட்டுமல்லாமல், மின் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் கோருகிறது. இன்டக்ஷன் அடுப்புகளின் பரவலான பயன்பாடு மின்சார தேவையை தோராயமாக 13 GW முதல் 27 GW வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் டிரான்ஸ்பார்மர்கள், விநியோக நெட்வொர்க்குகள் மற்றும் வீட்டு வயரிங் ஆகியவற்றை மேம்படுத்த மின் விநியோக நிறுவனங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

