இந்தியத் திரை இசையில் மலையளவு சாதனைகளைத் தனது காந்தக் குரலால் நிகழ்த்தி, தனித்துவமாக ஜொலித்த ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி-க்கு இன்று 80வது பிறந்தநாள்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஹரிகதை கலைஞரான எஸ்.பி. சாம்பமூர்த்தி, சகுந்தலா தம்பதிக்கு மகனாக 1946 ஜூன் 4ம் தேதி பிறந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். சிறுவயதில் இருந்தே எஸ்.பி.பி-க்கு இசையின் மீது நாட்டம் இருந்தாலும், தனது மகன் ஒரு பொறியாளராக வேண்டும் என்பதே அவரது தந்தையின் ஆசை. இதனால் எஸ்.பி.பி சென்னையில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். கல்லூரிக் காலத்தில் பல்வேறு இசைப் போட்டிகளில் கலந்து கொண்டு தனது இசைத் தாகத்தை தணித்து, பல்வேறு பரிசுகளையும் அவர் குவித்தார்.
எஸ்பிபி திரையுலகில் முதன்முதலில் பாடியது ஒரு தெலுங்குப் பாடலாகும். 1966 டிசம்பர் 15ல் வெளியான ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா’ என்ற திரைப்படத்தில் “ஏ நிஜமு நம்மோலி” என்ற பாடல் மூலம் திரையுலகில் தடம் பதித்தார். 1966-லேயே ‘நகரே இதே ஸ்வர்கா’ என்ற படத்தில் கன்னடத்திலும் பாடினார்.
தமிழில் அவர் பாடிய முதல் பாடல் ‘ஹோட்டல் ரம்பா’ என்ற படத்திற்காகப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்தப் படம் திரைக்கு வரவில்லை. பின்னர், 1969-ல் வெளியான ‘சாந்தி நிலையம்’ திரைப்படத்தில் “இயற்கை என்னும் இளய கண்ணி” என்ற பாடலைப் பாடினார். அதே 1969-ல், எம்.ஜி.ஆர் நடித்த ‘அடிமைப் பெண்’ திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் பாடிய “ஆயிரம் நிலவே வா…” பாடல் முதலில் வெளியாகி எஸ்பிபி-யைத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
திரையிசை உலகில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் படைத்த சாதனைகளை எவரும் முறியடிப்பது அவ்வளவு எளிதல்ல. அந்தளவுக்கு எண்களாலும், திறமையாலும் தனது சாதனைகளைப் பிரம்மாண்டமான பதித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 16-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி அவர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமார் இசையில், ஒரே நாளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணிக்குள் 21 பாடல்களைப் பதிவு செய்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் உலக சாதனை படைத்தார். இதேபோல் தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் ஒரே நாளில் 16 பாடல்களையும் பதிவு செய்து அசத்தினார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலம் தொடங்கி ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், மோகன் என எடுத்தகட்ட கதாநாயகர்கள் வரிசையில் அஜித், விஜய், தனுஷ் எனப் அடுத்தகட்ட தலைமுறை நடிகர்களுக்கும் அவர்களின் குரலாகவே மாறிப் பாடிய பெருமை எஸ்.பி.பி-க்கு உண்டு.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், தேவா எனப் பல தலைமுறை இசையமைப்பாளர்களின் முதல் தேர்வாக எஸ்.பி.பி இருந்தார். 2000-ம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இமான், ஜி.வி.பிரகாஷ், அனிருத் போன்றோர்களின் இசையமைப்பில் பாடினார். இருப்பினும் இளையராஜா- எஸ்பிபி கூட்டணி தமிழ் சினிமாவின் பொற்காலம்.
எஸ்பிபி வெறும் பாடகர் மட்டுமல்ல, அவர் ஒரு பன்முகக் கலைஞராக திரையுலகில் ஜொலித்தார். தெலுங்கில் கமல்ஹாசன் நடித்த பெரும்பாலான படங்களுக்கு எஸ்.பி.பி. தான் குரல் தந்துள்ளார். உதாரணமாக சலங்கை ஒலி, நாயகன் போன்ற படங்களை சொல்லலாம். மேலும் ரஜினிகாந்த், பாக்யராஜ், மோகன்லால் போன்றோருக்கும் தெலுங்கில் குரல் கொடுத்துள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
கேளடி கண்மணி, சிகரம், குணா, காதலன், அவ்வை சண்முகி, மின்சாரக் கனவு உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து சிறந்த நடிகராகவும் முத்திரை பதித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார் எஸ்.பி.பி. சிகரம் உட்பட 40-க்கும் மேற்பட்ட படங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சிறந்த பின்னணிப் பாடகருக்கான 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார். இந்திய அரசு இவருக்கு 2001ல் பத்மஸ்ரீ, 2011ல் பத்மபூஷண் மற்றும் மறைவுக்குப் பிறகு 2021ல் பத்மவிபூஷண் விருதுகளை வழங்கி கௌரவித்தது. இது தவிர, ஆந்திர அரசின் நந்தி விருதுகளை 25 முறைக்கும் மேலாகவும், தமிழக அரசின் மாநில விருதுகளைப் பலமுறையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வென்றுள்ளார்.
காதலை, சோகத்தை, தத்துவத்தை, உற்சாகத்தை அன்றாடம் கேட்டுக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இசைப்பிரியர்களின் இதயங்களில் “பாடும் நிலாவாக” அவர் என்றும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்.
