உலகம் தற்போது மிகவும் பதற்றமான மற்றும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதால், எந்த ஒரு நாடோ அல்லது ஒரு கூட்டமைப்போ தனித்து இந்த சவால்களை சமாளிக்க முடியாது என்று கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா மற்றும் ஆசியான் (ASEAN) நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறும் குவாட் (Quad) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் மற்றும் ஆசியான் (ASEAN) அமைப்பின் அமைச்சரவை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார்.

அங்கு நடைபெற்ற இந்தியா–ஆசியான் 2026 பிந்தைய அமைச்சரவை மாநாட்டில் (ASEAN Post-Ministerial Conference with India 2026) தொடக்க உரையாற்றிய அவர், இந்தாண்டின் மாநாட்டு கருப்பொருளான “Navigating Our Future Together” (நமது எதிர்காலத்தை ஒன்றாக வழிநடத்துவோம்) என்பது தற்போதைய உலகச் சூழ்நிலையை மிகத் துல்லியமாக பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.

“உலகம் மிகவும் பதற்றமான காலகட்டத்தை எதிர்கொள்கிறது. எந்த ஒரு நாடோ அல்லது ஒரு கூட்டமைப்போ தனித்து அனைத்து சவால்களையும் சமாளிக்க முடியாது என்பது இன்று தெளிவாகியுள்ளது. எனவே, பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது காலத்தின் தேவை,” என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மேலும், இந்தியா–ஆசியான் முழுமையான மூலோபாய கூட்டாண்மையை (Comprehensive Strategic Partnership) மேலும் வலுப்படுத்துவதில், ஆசியானுக்கான நாட்டு ஒருங்கிணைப்பாளராக (Country Coordinator) செயல்பட்டு வரும் பிலிப்பைன்ஸ் முக்கிய பங்காற்றி வருவதை அவர் பாராட்டினார்.

இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கிடையேயான பொருளாதாரம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பிராந்திய நிலைத்தன்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version