தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இன்று பாமக என்ற கட்சி இரு பிரிவாக பிரிந்து கிடக்கிறது. அன்புமணி தரப்பினர் மற்றும் ராமதாஸ் தரப்பினர் என இருபிரிவாக இருப்பவர்களுக்கு மத்தியில், நிர்வாகிகளும் தொண்டர்களும் யாரைப் பின்பற்றுவது என்ற குழப்பத்தில் உள்ளனர். அவ்வப்போது தனது மகன் அன்புமணி குறித்து பொது வெளியில் திட்டித் தீர்த்து வருகிறார் ராமதாஸ்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அன்புமணி தரப்பு பாமகவினர் அதிமுகவோடு கூட்டணிக்கு சென்றுவிட, ராமதாஸ் தரப்பை திமுக இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. பாமக சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், யார் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வழக்கம் போல அன்புமணி தரப்பை கடுமையாக சாடினார். அதாவது,

”ஒரு கூட்டம் பொய் சொல்வதையே அரசியலாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மனம் புண்படும்படி பேசி வருகின்றனர். கட்சிக்காக ஓயாமல் உழைத்தவர் ஜி.கே.மணி அவரையும் வசைபாடுகின்றனர். அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை எதையோ பேசுகிறார்கள். அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியை விட்டு நீக்கிவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version