திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், திமுக மத்திய மற்றும் வடக்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கழக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேரு, சமீபத்திய தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் இந்த கூட்டத்தில், ஜூன் 3-ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழகங்களில் கட்சித் கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். மேலும், கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைச் சமூக வலைதளங்களில் குறும்படங்களாக பதிவிட்டு இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கே.என்.நேருவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், இவர்களை நியமித்த கழகத் தலைவருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவளித்த திருச்சி மாவட்ட வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து பேசிய கே.என்.நேரு, நடந்து முடிந்த தேர்தலில் நமக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் 17 லட்சம் தான். சுமார் 27 தொகுதிகளில் நாம் 1,000 முதல் 2,000 வாக்குகள் என்ற மிகக் குறைந்த வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டிருக்கிறோம். தேர்தல் இன்னும் சில நாட்களுக்கு முன்பாக நடந்திருந்தால் நாமே வென்றிருப்போம். கடைசி 3 நாட்களில் வீசிய மாற்றுக்காற்றே இந்தச் சிறிய பின்னடைவுக்குக் காரணம்.”
முன்பு திமுக vs அதிமுக என்றிருந்த போட்டி, இன்று ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சியான நமக்கும் இடையிலானதாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் போன்ற புதிய கட்சிகளின் வரவு வாக்குகளைப் பிரித்துள்ளது. அதிமுக கூட்டணியின் வாக்குகள் எங்கு திரும்பும் என்ற கணக்கும் இதில் உள்ளது.”
மேலும், எதிர்த்தரப்பினர் சமூக வலைதளங்களை மிகத் தந்திரமாகப் பயன்படுத்தி, இளம் தலைமுறையினரையும் குடும்பங்களையும் நேரடியாகச் சென்றடைந்து வாக்குகளைப் பெற்றுள்ளனர். நாம் அவர்களை ஆரம்பத்தில் ஒரு பொருட்டாகக் கருதாமல் விட்டதே அவர்கள் முன்னேறக் காரணமாகிவிட்டது.”
கழகத்தை மீண்டும் வலுப்படுத்த ‘கலைஞர்’ என்ற பெயரே மிகப்பெரிய ஆயுதம் என்று குறிப்பிட்ட கே.என்.நேரு, ஜூன் 3 இயக்கத்தை அதற்குச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், “எனக்கிருக்கும் பொறுப்பை விட, நேரடியாகக் களத்தில் நிற்கும் ஒன்றியக் கழகச் செயலாளர்களுக்குப் பொறுப்பு மிக அதிகம். கட்சி இக்கட்டான சூழலைச் சந்தித்தபோதெல்லாம் திருச்சி மாவட்டம் எப்போதும் அரணாக நின்று மீட்டெடுத்துள்ளது. அதேபோல, இப்போதும் நிர்வாகிகள் யாரும் மெத்தனமாக இருக்காமல் அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும்” என்று தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்தார்.
