சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் இதுவரை 15 கோரிக்கைகள் வைத்தும் ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்ற வில்லை என காங்கிரஸ் மாநகராட்சி மன்றக் குழு தலைவர் திரவியம் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் காங்கிரஸ் மாமன்ற குழு தலைவர் திரவியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;-
கடந்த மூன்று நாட்களாக ஒரு மாமன்ற உறுப்பினராக மாநகராட்சி ஆணையரை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன், ஆனால் என்னால் சந்திக்க முடியவில்லை. இன்றும் கூட அவரது இடத்தில் அவர் இல்லை.
கடந்த மூன்று மாதங்களாக மாமன்ற கூட்டம் கூட்டப்படவில்லை. ஒரு மாதம் மாமன்ற கூட்டம் கூட்டப்படவில்லை என்றாலே மக்கள் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பது நாடறிந்தது.
தேர்தல் நடத்தை விதி முடிந்த நிலையில், இந்த மாதம் மாமன்ற கூட்டம் கூட்டப்பட வேண்டும். அது ஏன் கூட்டப்படவில்லை? என்ற கேள்வி கேட்பதற்காக மேயர் மற்றும் ஆணையரை சந்திக்க வந்தேன். அவர்கள் அவர்களது இருக்கைகளில் இல்லை.
தேர்தலுக்கு முன்பு விஜய் குறித்து விமர்சித்த தலைவர்களையும் முதல்வரான பிறகு விஜய் நேரில் சென்று சந்தித்தார். ஆனாலும் கூட பைத்தியம் பிடித்தது போல் பாதிக்கப்பட்ட தலைவர்கள் பேசுகின்றனர்.
கடந்த 56 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் மதிப்பும் மரியாதையும் மறைக்கப்பட்டது. எங்களது உரிமைகள் மறுக்கப்பட்டது, ஒரு அடிமை கூட்டம் போல் எங்களை நடத்தினார்கள். எங்களுக்கு விடுதலை கிடைத்ததாக உணர்கிறோம்.
தமிழக அரசியலில் என்ன நடக்கப்போகிறது என்று ஆறு மாதங்களுக்கு முன்பே ராகுல் காந்திக்கு தெரியும். திமுகவிடம் சொத்தையா கேட்டோம்? எங்களது உரிமையையும் ஆட்சியில் பங்கையும் தான் கேட்டோம்.
குதிரை பேரம் நடப்பதாக அயோக்கியர்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? குதிரை பேரம் நடத்தியதே திமுகவும், அதிமுகவும் தான்…
உதயநிதி வந்ததனால்தான் திமுக கீழே சென்றுள்ளது. அவர் பேசிப் பார்த்தார் ஆனால், அவரது பருப்பு வேக வில்லை.
நீட் தேர்வு, எய்ம்ஸ் குறித்து பேசினார்களே தவிர, அவர்கள் ஆட்சியில் ஏதாவது முடிவு கொண்டுவரப்பட்டதா?
ராகுல் காந்தி குறித்து பேச இவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசுக்கு கொடுத்தது நேரு குடும்பம். உதயநிதியின் தாத்தா எங்கிருந்து வந்தார், எந்த ரயிலில் வந்தார், இப்போ எப்படி இவ்வளவு சொத்து வந்தது..
யார் யார் எவ்வளவு கொள்ளை அடித்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.
நேரு குடும்பம் கோடீஸ்வர குடும்பம், அவர்களது சட்டை லண்டனில் இருந்து வெளுத்து வரும். உங்களது சட்டை எங்கிருந்து வெளுத்து வந்தது?
ஆட்சியில் பங்கு என்பதற்காக கூட்டணி முடிவு எடுக்கப்பட்டது என்றால், தவெக முதல் மாநாட்டிற்கு பிறகே கூட்டணி வைத்திருக்கலாமே என்ற கேள்விக்கு,
80 சதவீத தொண்டர்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் கட்சியில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்களை அழைத்து பேசினார்கள், அவர்கள் அவர்களது பதவியை காப்பாற்ற அந்த முடிவை(திமுக கூட்டணி) எடுத்தார்கள்.
கட்சி தொண்டர்களின் கருத்தை சில தலைவர்கள் தவறாக எடுத்து செல்கிறார்கள். அதன் காரணமாக தான் அன்றைய முடிவு தவறியது.
மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் எவ்வாறு செயல்பட போகிறது என்ற கேள்விக்கு,
இதுவரை 15 கோரிக்கைகள் வைத்திருக்கிறேன் ஆனால் இந்த மாநகராட்சி ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்ற வில்லை.
கூட்டணியில் இருந்த போதே எங்களது கோரிக்கைகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
கூட்டணி கட்சி என்ற மரியாதையை கூட எங்களுக்கு கொடுக்கவில்லை. மாநகராட்சி அலுவலகத்தில் டீ குடிப்பதற்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டோம், அதைக் கூட கொடுக்கவில்லை.
31ம் தேதிக்குள் மாமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.
