நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலை வன்மையாகக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் 27-ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.
கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று கோரி புதுடெல்லியில் மாணவர்களும் இளைஞர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) சார்பில் நடத்தப்பட்ட பேரணியின்போது மத்திய அரசின் காவல்துறை மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது. ஏராளமான மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
திருமாவளவன் மேலும் கூறியதாவது: தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் 152 முறை கசிந்துள்ளன. பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு சுமார் 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இத்தகைய கடுமையான குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது வேதனையளிக்கிறது.
மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். சிவில் உடையில் வந்து மாணவர்களைத் தாக்கியவர்கள் யார் என்பதை டெல்லி காவல்துறை இதுவரை விளக்கவில்லை. பல மாணவர்களுக்கு கை, கால் முறிவு, தலை காயம் உள்ளிட்ட பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துவோம்:
• கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்.
• மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• பிரதமர் மோடி இதுபற்றி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
• நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
• மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் 27-ம் தேதி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மாணவர்களின் நியாயமான குரலுக்கு ஆதரவாக அமையும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
