தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில் கடந்த 17ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காவல் நிலையத்தில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அருணாச்சலத்திற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அருணாச்சலம் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காவல் நிலைய விசாரணையின் போது அருணாச்சலம் தாக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட காயங்களே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர்கள், சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், அருணாச்சலத்தின் மரணம் குறித்து நீதித்துறை நடுவர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும், பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அவரது உடலை பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, இன்று அருணாச்சலத்தின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு வரப்பட்டது. பரிசோதனை தொடங்குவதற்கு முன்பு அவரது தந்தை நாகராஜ் மற்றும் தம்பி சுடலைமணி உள்ளிட்ட உறவினர்கள் உடலை அடையாளம் காட்டினர்.

தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயராஜசேகர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவினர்களின் கோரிக்கையை ஏற்று, அருணாச்சலத்தின் உடலில் மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை விசாரணையின் முடிவுகளின் அடிப்படையிலேயே அவரது மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version