தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, முக்கிய அரசுத் துறைகளில் அதிகாரிகள் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, காவல்துறை உயர் மட்டத்திலும் அதிரடி இடமாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில், தமிழ்நாடு ஆயுதப்படை டிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டல், தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இப்பதவியில் இருந்த ஓய்வு பெற்ற அதிகாரி சுனில் குமார், ஆட்சி மாற்றத்திற்குப் பின் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அந்த வெற்றிடத்திற்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், தமிழ்நாடு காவலர் அகாடமியின் இயக்குநராகப் பணியாற்றிய தினகரன், தமிழ்நாடு ஆயுதப்படை ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படைத் தலைமைப் பொறுப்பு தற்போது டிஜிபி அந்தஸ்திலிருந்து ஏடிஜிபி அந்தஸ்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், அவர் அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.

தமிழ்நாடு தீ மற்றும் மீட்புப் பணிகள் டிஜிபியாக இருக்கும் சீமா அகர்வால், கூடுதலாக ‘தீயணைப்பு ஆணையத் தலைவர்’ பொறுப்பையும் கவனிக்க உள்ளார். முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால், தீயணைப்பு ஆணையத் தலைவர் பதவியை வகித்து வந்தார். சமீபத்திய ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அவர் அப்பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்த கூடுதல் பொறுப்பு தற்போது சீமா அகர்வாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் மணிவாசன் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார். காவல்துறை நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version