தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, போக்குவரத்துத் துறையில் பல்வேறு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய பேருந்துகளின் வண்ணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்காக (MTC) தயாராகும் புதிய பேருந்துகளின் உடல் பகுதி, தவெகவின் கட்சிக் கொடி நிறமான மஞ்சள் மற்றும் அடர் சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இந்தப் புகைப்படங்களில் பேருந்துகளின் உடல் மஞ்சள்-சிவப்பு கலவையில் இருப்பதுடன், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் என்ற ஸ்டிக்கரும் தெளிவாகத் தெரிகிறது. இதனால், மக்கள் வரிப்பணத்தில் கட்சி விளம்பரம் செய்யப்படுவதாக நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். “அரசுப் பேருந்துகளை கட்சிக் கொடி போல மாற்றுவது ஏற்புடையதா?” என்ற கேள்விகளைப் பலரும் எழுப்பியுள்ளனர்.

தவெக அரசு போக்குவரத்துத் துறையில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் விஜய் உத்தரவின்படி, இனி ஏர் கண்டிஷனர் பேருந்துகளையே கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணக் கட்டணத்தை உயர்த்தாமல், விளம்பரங்களின் மூலம் வருவாயை அதிகரிக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை அதிக அளவில் கொள்முதல் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சி பயணிகளுக்கு மகிழ்ச்சியைத் தரும் நிலையில், வண்ணம் தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒரு தரப்பினர் இந்த வண்ணம் தவெக கொடி நிறம் இல்லை என்றும், ஏற்கெனவே இயக்கப்படும் சில பேருந்துகளுக்கும் இதேபோன்ற நிறம் பூசப்பட்டிருந்ததாகவும் விளக்கம் அளித்து வருகின்றனர். எனினும், புகைப்படங்களின் உண்மைத்தன்மை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

தவெக ஆட்சியின் இந்த அதிரடி நடவடிக்கைகள் மக்களிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. புதிய பேருந்துகளின் வண்ணச் சர்ச்சை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version