தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சிகள் அனைத்தும் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக தலைமையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, டெல்லியில் அமித்ஷாவுடன் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதிமுக வலியுறுத்திய இரட்டை இலை சின்னத்திற்கு பதிலாக குக்கர் சின்னத்திலேயே அமமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தினகரன் திட்டவட்டமாக தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயலும் உடனிருந்துள்ளார்.

