தமிழ்நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பு மோசமான நிலையில் உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பத்தூர் அருகே குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிகழ்ந்துள்ள சம்பவத்தைச் சுட்டிக்காட்டி இந்தக் குற்றச்சாட்டை டிடிவி தினகரன் முன்வைத்துள்ளார்.
குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் காயமடைந்த நிலையில் வந்த நபருக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் சிகிச்சை அளித்துள்ளார்.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், இதனைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை இந்த செய்தி வெளிச்சம் போட்டு காட்டுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அடிப்படை பணியாளர்கள் கூட இல்லாமல் இருப்பதும், தூய்மைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதும் அங்குவரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் செயலாகும் என வேதனை தெரிவித்துள்ள டிடிவி தினகரன்,
தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனைகள் வரை உரிய ஆய்வு மேற்கொள்ளவும், அங்கு 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்தியுள்ளார்.
