காதல் என்னும் கொடிய செயல்தான் கவின் கொலைக்கு காரணம் என இயக்குநர் கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் கஸ்தூரி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்றைய பிள்ளைகள் படிப்பு, காதல் அதன் பின் தான் வாழ்க்கை என்று இருக்கிறார்கள்.
கவின் என்பவர் கொலை செய்யப்பட செய்தியை பார்த்தேன். அந்தப் பையன் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து, உத்தியோகத்துக்கு போன பையன். யாரை குறை சொல்வது? யாரையும் சொல்ல முடியாது. அந்த துர்மரணத்துக்கு ஒரே காரணம், காதல் என்று சொல்லப்படும் கொடிய செயல் தான்.
படிக்கப்போனால் படி, வேலைக்கு போனால் வேலைக்கு போ. கல்யாணம் என்ற நிலை வரும் போது அப்பா அம்மாவிடம் விடு. உனக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்பவர்கள். அவர்களின் வலியை இன்றைய பிள்ளைகள் உணர்வதில்லை. உங்களுக்கு ஒரு நல்ல கல்யாணம் செய்து வைக்க அந்த அப்பா அம்மாவுக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.
காதல் தப்பு என சொல்லவில்லை. எனக்கு 20 வயதுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது, என் மனைவிக்கு அப்போது 15 வயதுதான். கிட்டத்தட்ட அது செல்லாத கல்யாணம் தான். அதற்கு முன்பு காதல் வந்தது, எனவே படிப்பு தடம் புரண்டது. டிகிரியை முடிக்காமல் போனதற்கு ஒரே காரணம் காதல்தான் எனத் தெரிவித்த கஸ்தூரி ராஜா,
நம் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு எதுவெல்லாம் ஆதரவாக இருக்கிறதோ அது எல்லாம் தான் காதல். உன் வாழ்க்கையை பின்னுக்கு இழுக்கும் எதுவும் காதல் கிடையாது. காதல் எந்த வயதிலும் வரும், ஆனால் கொஞ்சம் காத்திருங்கள் என அறிவுறுத்தினார்.
