தவெக ஆட்சிக்கு வந்ததும் கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி என்று அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் புதிய அரசு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மே 25, 2026 அன்று பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தை அறிவித்தது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட கடன்களுக்கு மட்டும் இந்தத் திட்டம் பொருந்தும். குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை முழுத் தள்ளுபடியும், பெரு விவசாயிகளுக்கு ரூ.5,000 நிவாரணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சுமார் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு பலனளிக்கும் என அரசு தரப்பில் கூறப்பட்டாலும், விவசாய சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது தவெக வெளியிட்ட வாக்குறுதிகளுக்கு மாறாக இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பதால், “மிகப்பெரிய ஏமாற்றம்” என விவசாயிகள் விமர்சிக்கின்றனர். குறிப்பாக, 5 ஏக்கருக்குக் குறைவான நிலம் வைத்துள்ள குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கடன் அளவுக்கு ஏற்ப தள்ளுபடி என்ற புதிய நிபந்தனை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். “தேர்தலுக்கு முன்பு 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்த தவெக, ஆட்சிக்கு வந்ததும் கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி என்று அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம்” என அவர் தெரிவித்தார்.

இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்யும் விவசாயிகள் சுமார் 3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் சூழலில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு முழுத் தள்ளுபடி மறுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் உள்ளவர்களுக்கு வெறும் 5,000 ரூபாய் மட்டுமே நிவாரணம் என்பது பெரும் ஏமாற்றம் என்கின்றனர். டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பும் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. “இது தவெக அரசின் மற்றொரு பித்தலாட்டம். முன்பு 200 யூனிட் இலவச மின்சாரம் போலவே இந்தத் தள்ளுபடியும் விவசாயிகளை ஏமாற்றும் வேலையே” என அவர்கள் விமர்சித்துள்ளனர்.

விவசாயிகள் தரப்பில், தேர்தல் அறிக்கையில் கூறியபடி 5 ஏக்கருக்குக் குறைவான நிலம் உள்ள அனைத்து குறு சிறு விவசாயிகளின் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் விவசாயம் தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலம் இந்த முடிவைப் பொறுத்தே அமையும் என்பதால், அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாய சமூகத்திடையே பெரும் பேச்சுப் பொருளாக மாறியுள்ள நிலையில், அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version