தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு முதல்வர் விஜய், விவசாயிகள் சாகுபடி செலவின வகைக்காக கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன்களில் ரூ.50 ஆயிரம் வரையான கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என நேற்று அறிவித்துள்ளார். இது தலைமுறை, தலைமுறையாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை குறைக்காது.

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்” என வழங்கியுள்ள உறுதி மொழிக்கும் மாறானது.

இதுவரை விவசாயிகளுக்கான கடன் நிவாரணம் சாகுபடி நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டதாகவே வழங்கப்பட்டது. இந்த வழிமுறையை மாற்றி “பண மதிப்பை” அடிப்படையாகக் கொண்டு வகுத்துள்ள புதிய முறையும் ஏற்கதக்கதல்ல.

ஏனெனில், மாவட்டத்துக்கு மாவட்டம், பயிருக்கு பயிர் சாகுபடிச் செலவுகள் மாறுபடும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

இதனை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் பயிர் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்து, மறு உத்தரவு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, முதல்வரை கேட்டுக் கொள்கிறது” என அவர் கூறியுள்ளார்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி திருப்பூர் சுப்பராயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் அறிவித்திருக்கிற விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. நாடெங்கும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். வாக்குறுதி கொடுத்தபடி இரத்து செய்யவில்லையே என்ற வருத்தம் விவசாயிகளை உலுக்கி வருகிறது.
எனவே, ஐந்து ஏக்கரும், அதற்கு கீழே நிலம் உள்ள விவசாயிகளுக்கு சகல கடன்களையும், தாங்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளபடி முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்று உறுதிப்பட வற்புறுத்துகிறேன். அதற்கு மேலே கடன் உள்ள விவசாயிகளின் கடன்களில் 50% தொகையை இரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சரை வற்புறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version