உத்திரமேரூர் அருகே உள்ள அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் சென்று முதல்வர் புகைப்படத்தை மாட்டி மாணவர்களுக்கு பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட தவெக நிர்வாகிகள்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவராம்பூண்டி ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளியில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நிர்வாகிகளின் அத்துமீறிய நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து கட்சி நிர்வாகிகள் அரசுப் பொறுப்பில் இருப்பதைப் போல் நடந்துகொள்வது வழக்கமாகிவிட்ட நிலையில், இந்தச் சம்பவம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சம்பவத்தன்று, தவெக ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் தவெக துண்டுகளை அணிந்தபடி, எந்தவித உள்ளாட்சி பொறுப்பும் இல்லாத நிலையில் அரசு அதிகாரிகள் போன்று நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. வகுப்பறைக்குள் நுழைந்த அவர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் வகையில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

முதல்வர் விஜய்யின் புகைப்படத்தை மாணவர்களிடம் காட்டிய ராஜேஷ், “இவர் யார் தெரியுமா? இவர்தான் நமது முதல்வர். உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்” என்று பேசியதாக வீடியோவில் தெரிகிறது. இந்த நடவடிக்கை மாணவர்களின் இயல்பான கல்விச் சூழலை பாதித்ததுடன், அரசியலை வகுப்பறைக்குள் கொண்டு வரும் செயலாகவும் விமர்சிக்கப்படுகிறது.

இதுவரை பள்ளியின் தலைமையாசிரியர் அலுவலகத்தில்தான் முதல்வர் படங்கள் இடம் பெற்று வந்தன. வகுப்பறைகளில் அரசியல் தலைவர்களின் படங்களை மாட்டும் மரபு இல்லாத நிலையில், இந்தச் சம்பவம் பாரம்பரியத்தை மீறிய செயலாகக் கருதப்படுகிறது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “மாணவர்களிடையே அரசியலை விதைக்கும் செயல்” என்று பலர் வர்ணித்துள்ளனர்.

தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கட்சி நிர்வாகிகள் எந்தவித நெறிமுறையும் இன்றி செயல்படுவது தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பள்ளிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் அரசியல் தலையீட்டுக்கு அப்பாற்பட்டவை என்பது அடிப்படை நெறி. ஆனால், இந்தச் சம்பவம் அந்த எல்லையை மீறியதாகக் கூறப்படுகிறது.

கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளனர். மாணவர்களின் படிப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தச் செயலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்பது பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version