முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியினர் பலர் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு தவெக ஐடி விங் தரப்பில் மிக காட்டமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ வாய் இருக்கிறது என்பதற்காக வரம்பு மீறிப் பேசுவதில், fake narrative திமுகவை யாராலும் அடித்துக்கொள்ளவே முடியாது. அந்த வேலையை அச்சு பிறழாமல் செய்தால், திமுகவை மக்கள் நம்பிவிடுவர் என்ற நப்பாசையில் அவதூறு கழகத் தலைவராக மாறி, வெறும் வாயில் அவதூறுகளை மென்றுகொண்டே ஓர் அறிக்கை விட்டிருக்கிறார் ஸ்டாலின் சார்.
பொறுப்பானப் பதவியில் இருந்ததோடு, தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் பொறுப்பை உணராமல் பேசியது குறித்து உயர்நீதிமன்றம் என்ன கூறியது என திமுக மற்றும் ஸ்டாலின் சாரின் செவிகளில் ஏறாமல் போனது ஏனோ? அனிதா ராதாகிருஷ்ணனா அல்லது அவதூறு கோதாகிருஷ்ணனா என்பது போன்று பேசியதை ஸ்டாலின் சார் வேண்டுமானால் மெச்சிக் கொள்ளலாம். ஏனெனில், திமுக அவதூறு கழகமாக மாறி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இந்நிலையில், fake narrative அறிக்கை விட்டு, புனித பிம்பம் கட்டும் build up அரசியலை ஸ்டாலின் சார் செய்ய முற்பட்டுத் தோற்றிருக்கிறார்.
எந்தத் தவறும் செய்யாத பத்திரிகையாளர்கள் முதற்கொண்டு எத்தனையோ பேர் மீது அடக்குமுறையை ஏவிக் கைது செய்து சிறையில் அடைத்த ஸ்டாலின் சார், இப்போது ஜனநாயகக் காவலர் வேஷம் போடுகிறார். கைது மாடல் அரசாகவே மாறி இருந்த கரப்ஷன் கபடதாரிகளான திமுகவினர், சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அரசு மீது கல்லெறிவது கயமைத்தனமன்றி வேறென்ன? மக்கள் தீர்ப்பை மதிக்காமல், ஆட்சி அதிகாரம் இழந்த ஆத்திரத்தில், மனசாட்சி உள்ள மக்களாட்சியான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கத் தன் கொத்தடிமைக் கூட்டத்து முன்னாள் அமைச்சரைத் தூண்டிவிட்ட ஸ்டாலின் சார், இரண்டு நாள்களாக எங்கிருந்தார் என்று தெரியவில்லை. இப்போது வந்து, வீட்டுக்குள் இருந்து, வெற்று அறிக்கை வெளியிடுகிறார். உப்பைத் தின்றால் சப்பாத்தியா சாப்பிட முடியும்?. தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும்.
குதிரை பேரம், ஒட்டக பேரம் முதல் அனைத்து அரசியல் மிருக பேரங்களையும் நடத்தத் தொடங்கி உள்ள திமுக, மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்பதால் இப்போது ஜனநாயக வேஷம் போட்டு, அவதூறு கச்சேரியை ஆரம்பித்துள்ளது. திருட்டு மாடல் திமுக ஆட்சியின் ஒவ்வோர் ஊழலாக வெளிவந்துவிடுமே என்ற பயத்தில் உத்தமர் வேடம் போட்டு, மக்களை மீண்டும் ஏமாற்றும் வேலையில் ஸ்டாலின் சார் ஈடுபட்டால், இதை மறந்துவிட வேண்டாம்,அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
