ஆட்சி தவெக-வின் நாற்காலியின் 2 கால்கள் அக்கட்சியிடம் இல்லை என்றும் எந்த நேரத்திலும் நாற்காலி சாயும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலத்தில் அதிமுகவின் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தவெக-விடம் தற்போதுள்ள ஆதரவு மற்றும் அரசியல் கட்டமைப்பு ஒரு நாற்காலியின் நான்கு கால்களில் இரண்டை மட்டுமே கொண்டுள்ளதைப் போன்றது என்றார். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாற்காலி சாயும் என்றும் அவர் தெரிவித்தார். பெரும்பான்மையான இடங்களில் தவெக வெற்றி பெறவில்லை என்றும் 8 மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட தவெக வெற்றி பெற முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சி அமைந்துள்ளதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அந்தக் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தவெக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். ஆட்சியை அதிகாரிகள் நடத்தினால் முதலமைச்சர் எதற்கு என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா எப்போதும் தெய்வங்களாக இருந்து ஆசி வழங்கிக் கொண்டிருப்பதாகவும், பீனிக்ஸ் பறவையைப் போல அதிமுக மீண்டும் பெரும்பான்மையாக மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
