வெனிசுவேலாவில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,342 ஆக உயர்ந்துள்ளது. லத்தீன் அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நிலநடுக்கத்தால், கராகஸ் நகருக்கு வடக்கே உள்ள லா குவைரா கடற்கரைப் பகுதியில் கட்டிடங்கள் சரிந்து தரைமட்டமாயின. இந்த விபத்து நடந்து 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், அடையாளம் காணப்படாத பலரது உடல்கள் தற்போது அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

லா குவைராவில் உள்ள லா எஸ்பெரான்சா மயானத்தில், இதுவரை அடையாளம் காணப்படாத 150-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்ணியமான முறையில் அடக்கம் செய்யப்பட்டன. ஒரே நாளில் உயிரிழந்தவர்களைக் குறிக்கும் வகையில், அந்தப் பகுதியில் வெள்ளை நிற சிலுவைகளும் மலர் வளையங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 16,700 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்ததில், 17,000-க்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

நிலநடுக்கத்தில் சிக்கி மாயமானவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அரசு வெளியிடவில்லை என்றாலும், ஐக்கிய நாடுகள் சபை சுமார் 50,000 பேர் இன்னும் காணாமல் போயிருக்கலாம் என்று மதிப்பீடு செய்துள்ளது. இடிபாடுகளுக்கு இடையே தங்கள் உறவினர்களைத் தேடும் பணியில் பல குடும்பங்கள் இன்னும் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் அன்புக்குரியவர்களைக் காணாமல் பல நாட்களாகத் தூக்கமின்றி, இடிபாடுகளுக்கு அருகிலேயே பல குடும்பங்கள் தங்கியுள்ள அவல நிலை நீடிக்கிறது.

இந்த நிலநடுக்கத்தால் வெனிசுவேலாவுக்கு சுமார் 6.7 பில்லியன் டாலர் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது, இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாகும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் வெனிசுவேலாவில், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. அரசு தரப்பில் மீட்புப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதாகக் கூறினாலும், ஆரம்பகட்ட மீட்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், பேரிடருக்குப் பிறகும் நாட்டில் சமூக அமைதி நிலவுவதாகவும், மக்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தலைநகர் கராகஸ் மற்றும் லா குவைராவில் உள்ள தேவாலயங்களிலும், பல்கலைக் கழக வளாகங்களிலும் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் பிரார்த்தனைகளும் மெழுகுவர்த்தி அஞ்சலியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த துயரச் சம்பவத்தில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை இழந்த மக்களின் சோகம் அந்த நாட்டையே உலுக்கியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version