பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் ₹2.19 லட்சம் கோடி மதிப்பிலான 7 முக்கிய மெகா திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சரவை முடிவுகள் குறித்த விவரங்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.

இந்தியாவை உலகளாவிய சிப் உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, செமிகான் 2.0 திட்டத்திற்கு ₹1,27,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சிப் வடிவமைப்பு, உற்பத்தி உபகரணங்கள், செமிகண்டக்டர் பேக்கேஜிங் மற்றும் ஆராய்ச்சி ஆகிய 6 முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணன் தெரிவித்தார்.

உள்நாட்டிலேயே மொபைல் போன் உற்பத்தியை அதிகரிக்கவும், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும் ₹62,500 கோடி மதிப்பிலான புதிய மொபைல் போன் உற்பத்தித் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

உரம் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு அடைவதை நோக்கமாகக் கொண்டு, “தேசிய முதலீட்டுக் கொள்கை-2026” ஒப்புதல் பெற பெற்றுள்ளது. இந்த புதிய கொள்கையின் மூலம் அமைக்கப்படும் புதிய உர ஆலைகள் மூலம் உற்பத்திச் செலவு கணிசமாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கங்கை நதிக்கரையில் ₹14,448 கோடியில் 6 வழி உயர்மட்டப் பாலமும், வருணா நதிக்கரையில் ₹10,998 கோடியில் 4/6 வழி உயர்மட்டப் பாலமும் அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணன் தெரிவித்தார். ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களை இணைக்கும் பரதீப் – ஹரிதாஸ்பூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு ₹2,542 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், குறிப்பாக மின்னணு உற்பத்தி மற்றும் உள்நாட்டு உள்கட்டமைப்பில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version