மொத்தம் 13 ஆயிரத்து 343 தேர்வர்கள் அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்திய அரசுப் பணிகளில் உயர்ந்த அந்தஸ்து கொண்ட இந்திய நிர்வாகப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎப்எஸ்) உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) 2026 ஆண்டு முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 24ம் தேதி அமைதியான முறையில் நடைபெற்றது.
இந்த ஆண்டு மொத்தம் 933 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 8 லட்சத்து 19 ஆயிரத்து 372 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர். இதில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு காலை மற்றும் மாலை என இரு அமர்வுகளாக நடைபெற்றது. காலை அமர்வில் நடைபெற்ற பொது அறிவு தாள் (GS Paper-1) தேர்வர்களுக்கு சற்று கடினமாக இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர். வரலாறு, புவியியல், பொருளாதாரம், சமகால நிகழ்வுகள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆழமான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மாறாக, பிற்பகல் அமர்வில் நடைபெற்ற திறனறித் தேர்வு (CSAT – Paper-2) ஒப்பீட்டளவில் எளிதாகவும், நேர நிர்வாகத்துக்கு உகந்ததாகவும் இருந்ததாக தேர்வர்கள் சொன்னார்கள். தேர்வு முடிவுகள் நேற்று யுபிஎஸ்சியால் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தம் 13,343 தேர்வர்கள் அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்கு (Mains) தகுதி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை போட்டியின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.
தேர்வர்கள் தங்கள் முடிவுகளை யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsconline.nic.in/ முகவரியில் சென்று பார்த்து உறுதி செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை வருகிற ஜூன் 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. முதன்மைத் தேர்வு வழக்கமாக செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு (Interview/Personality Test) அழைக்கப்படுவார்கள். இறுதித் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பணியிடங்கள் ஒதுக்கப்படும்.
குடிமைப் பணிகள் தேர்வு இந்தியாவின் மிகவும் கடினமான மற்றும் மதிப்புமிக்க தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆண்டுதோறும் இந்தக் கனவை நனவாக்க முயற்சி எடுக்கின்றனர். இந்தத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகள் நாட்டின் நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு யுபிஎஸ்சி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. தோல்வியடைந்தவர்களும் தொடர்ந்து முயற்சி செய்யுமாறு ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.
