பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜே.டி. வான்ஸ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் பர்ஜென்ஸ்டாக் (Bürgenstock) ரிசார்ட்டில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான நீண்டகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் 14 அம்ச ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான முக்கிய பேச்சுவார்த்தைகள் நேற்று நடைபெற்றன. பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் சர்வதேச மத்தியஸ்தத்தில் இந்த உயர்மட்டப் பேச்சுகள் நடத்தப்பட்டன. இது இரு தரப்பினருக்கும் இடையேயான உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
அமெரிக்கத் தரப்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையில் அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் கலந்துகொண்டனர். ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் கத்தார் பிரதமர் ஆகியோர் நேரில் வருகை தந்து மத்தியஸ்தப் பங்கை வலுப்படுத்தினர்.
பேச்சுவார்த்தை நடைபெறும் போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு உடனடியாக வன்முறையை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தார். இல்லையெனில் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்தார். இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரானியப் பிரதிநிதிகள் சிறிது நேரம் அரங்கிலிருந்து வெளியேறினர் என்று ஈரான் செய்தி நிறுவனம் IRNA தெரிவித்தது. எனினும், பின்னர் பேச்சுகள் மீண்டும் தொடர்ந்ததாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈரான் சபாநாயகர் காலிபாப், “அமெரிக்கா தனது அறிக்கைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எங்கள் ஆயுதப்படைகள் எந்தத் தாக்குதலுக்கும் தயாராக உள்ளன. அவர்கள் சொல்வதை நாங்கள் செயல்படுத்துபவர்கள்” என்று உறுதியாக எச்சரித்தார். முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜே.டி. வான்ஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார். இருப்பினும், லெபனானில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்கள் பேச்சுகளை சற்று பாதித்தன.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தாலும், அமெரிக்கா அதை மறுத்தது. சனிக்கிழமை 55 வணிகக் கப்பல்கள் தடையின்றி பாதையைக் கடந்ததாக அமெரிக்கா கூறியது. ஒப்பந்தத்தின் விதிகளை அமெரிக்கா முழுமையாக நிறைவேற்றத் தவறினால் ஒட்டுமொத்த உடன்படிக்கையும் முறியும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இந்தப் பேச்சுகள் லெபனான், ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கியவை.
அடுத்த சில நாட்களில் தொடர் பேச்சுகள் நடைபெற உள்ளன. இரு தரப்பும் 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்ட முயற்சிப்பதாக மத்தியஸ்த நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த முயற்சி வெற்றி பெற்றால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நீண்டகால அமைதிக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
