தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் மீன்வளத் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்படும் எனவும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பணிமய மாதா பேராலய 444 ஆம் ஆண்டு திருவிழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பின்னர், சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்து பின்பு பனிமய மாதா பேராலயம் வந்து வழிபாடு நடத்தினார். மாதாவிற்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதைத்தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
பனிமய மாதா பேராலய 444 ஆம் ஆண்டு திருவிழாவுக்கு வந்துள்ள அனைவருக்கும் திருவிழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
பட்ஜெட் நன்றாக உள்ளது. எங்களுடைய மீன்வளத்துறைக்கான மானிய கோரிக்கை இன்னும் வரவில்லை. அது வரும் பொழுது மீனவர்களுக்கான திட்டங்கள் குறித்து தெரியும். இப்போது மீன்பிடி தடைக்கால நிவாரணம் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 7000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.93 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறுவார்கள். அதற்காக 135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்களுக்கு மானியம் வழங்குவதற்காக 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான கூடுதல் நிவாரணத் தொகை உள்ளிட்டவற்றை நிதிநிலைமை பொறுத்து தமிழக முதல்வர் அறிவிப்பார். மீன்வளத்துறை மானிய கோரிக்கை வரும்போது மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நாங்கள் முதல்வரிடம் பேசி உள்ளோம். ஒரு நல்ல முடிவு வரும்.
