இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையேயான மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உஸ்பெகிஸ்தான் குடியரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் சைதோவ் பக்தியோர் ஒடிலோவிச் (Saidov Bakhtiyor Odilovich), குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை திங்கள்கிழமை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார்.
இந்த உயர்மட்ட சந்திப்பில், இந்தியா – உஸ்பெகிஸ்தான் உறவை மேலும் விரிவுபடுத்துவது குறித்து வர்த்தகம், அரிய மண் தாதுக்கள் (Rare Earth Minerals), கல்வி பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்று மற்றும் நாகரிகத் தொடர்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரையும் அவரது குழுவினரையும் வரவேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையேயான உறவு பண்டைய பட்டுப் பாதை (Silk Road) வர்த்தக வழித்தடங்களின் மூலம் பல நூற்றாண்டுகளாக தொடர்வதாகக் குறிப்பிட்டார்.
மேலும், “இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகள் வரலாறு, கலாசாரம் மற்றும் நாகரிக அடிப்படையில் ஆழமான உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. கட்டிடக்கலை, மொழி, உணவு, இசை மற்றும் மத மரபுகள் ஆகிய துறைகளில் உள்ள ஒற்றுமைகள் இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன,” என்று குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியா – உஸ்பெகிஸ்தான் தொழில் மற்றும் வர்த்தக மன்றம் (Business Forum) நடத்தப்பட்டிருப்பது, இரு நாடுகளின் தொழில் நிறுவனங்கள் ஒருவரின் சந்தையில் மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக திரௌபதி முர்மு கூறினார்.
மேலும், அரிய மண் தாதுக்கள் சுரங்கம், வேளாண்மை, மருந்துத் தயாரிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா – உஸ்பெகிஸ்தான் இணைந்து செயல்பட மிகுந்த வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்வி மற்றும் தொழில்முறை பரிமாற்றத் திட்டங்கள் இருநாட்டு உறவின் முக்கிய பாலமாக உள்ளன என்றும் அவர் பாராட்டினார். இந்தியாவின் ITEC (Indian Technical and Economic Cooperation) பயிற்சி மற்றும் கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட உஸ்பெகிஸ்தான் அரசு அதிகாரிகள், தொழில்முறை நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
அதேபோல், தற்போது 16,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உஸ்பெகிஸ்தானில் உயர்கல்வி பயின்று வருவதாகவும், இது இரு நாடுகளின் மக்களிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தி வருவதாகவும் குடியரசுத் தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது.
மத்திய ஆசியப் பிராந்தியத்தில் இருநாட்டு மூலோபாய ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த உறுதி தெரிவித்த இருதரப்பும், இந்தப் பயணத்தின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையேயான நட்பு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தன.
உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சைதோவ் பக்தியோர் ஒடிலோவிச், ஆகஸ்ட் 2 முதல் 5 ஆம் தேதி வரை இந்தியாவில் உயர்மட்ட அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
